தற்காலிக சபாநாயகரைத் தேர்ந்தெடுத்து அவரது முன்னிலையில், வாக்குச்சீட்டு மூலம் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலை 10.30 மணிக்கு நீதிபதி என். வி. ரமணா தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
“நவம்பர் 27ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனை நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாக்குச்சீட்டு மூலம் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் எனவும் தற்காலிக சபாநாயகரைத் தேர்ந்தெடுத்து அவரது முன்னிலையில் நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தேவேந்திர பட்னவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிரத்தில் பட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்றிருப்பதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதனை ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. மேலும், ஆளுநர் எதனை அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்பதற்கான ஆதாரங்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி திங்கட்கிழமை (இன்று) காலை 10.30 மணி வரை அவகாசம் அளித்தது.
தொடர்ந்து திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்ற விசாரணைக்குப்பின், செவ்வாய்க்கிழமை (இன்று) தேவையான உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திங்கட்கிழமை மாலை சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக உள்ள 162 எம்எல்ஏக்களை ஒரே இடத்தில் கூடச் செய்து, தங்கள் பலத்தை அறிவித்தன.